பேருந்தில் திடீரென தீ விபத்து: 45 பயணிகள் பத்திரமாக மீட்பு

தாராபுரத்தில் ஓடும் பேருந்தில் திடீரென தீ விபத்து: 45 பயணிகள் பத்திரமாக மீட்பு
தாராபுரம், ஓடும் பேருந்தில் செல்ப் மோட்டாரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதுமின்றி, அதில் பயணித்த பயணிகள் 45-பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். திருப்பூரிலிருந்து பழனி செல்லும் அரசுப் பேருந்து 45 பயணிகளுடன் கிளம்பியது. அந்தப் பேருந்து தாராபுரத்தை வந்தடைந்தது. ஓட்டுநர் அர்ஜுனன் மற்றும் நடத்துநர் மருதாச்சலம் மூர்த்தி ஆகியோர் பேருந்தை இயக்கினர். தாராபுரம் பெரியார் தீவுத்திடல் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது செல் மோட்டார் கழண்டு இன்ஜின் பாகங்களில் ஒன்றை ஒன்று உரசி கொண்டதால் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்ஜின் பகுதியில் தீ பற்றியது. இதையடுத்து உடனடியாக பேருந்தில் இருந்த 45 பயணிகளும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். அடுத்த சில நிமிடங்களிலேயே பேருந்து மளமளவென தீ பற்றி எரிந்தது தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பேருந்தில் வந்த 45 பயணிகளும் மாற்றுப் பேருந்துக்காக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் காத்திருந்தனர் பேருந்து வர தாமதம் ஆனதால் பயணிகள் அவதி அடைந்தனர். பின்னர் மாற்றுப் பேருந்து வரவழைக்கப்பட்டு அனைத்துப் பயணிகளும் அதில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தாராபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story