தன் சொந்த சகோதரனே தன்னை அடித்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற அக்கா, ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

X
சொத்து பிரச்சனை காரணமாக சகோதரனே அடிப்பதாக கூறி நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அக்கா மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஒருவந்தூரை சேர்ந்தவர் கன்னியம்மாள், இவரது பெற்றோர்கள் கட்டிய பூர்வீக வீட்டில் கடந்த 40 வருடங்களாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வீட்டு பத்திரம் தனது தந்தை பெயரில் உள்ளதாக கூறி கன்னியம்மாவிடம் அவரது சகோதரர் மாரிமுத்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தனக்கும், தனது தந்தையின் சொத்தில் பங்கு உள்ளது என மோகனூர் தாலுக்கா அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவிதமான பயனும் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மாரிமுத்து, கன்னாயம்மாளின் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து, வீட்டு உபயோக பொருட்களை அடித்து கன்னியம்மமாளை தாக்கியதாகவும், இதனால் மனமுடைந்த கன்னியம்மாள் நியாயம் கேட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது வீட்டில் இருக்க விடாமல் தன்னை தனது சகோதரனே அடித்து விரட்டுவதாக கண்ணீர்விட்டு அழுத சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
