சேலத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான நில அளவையர்

X
சேலம் சூரமங்கலம் புதுரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். கூலித்தொழிலாளி. இவர் தனது தந்தை பெயரில் உள்ள நிலப்பட்டாவை தனது பெயருக்கு மாற்றக்கோரி சேலம் மேற்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவையர் பிரிவில் விண்ணப்பம் செய்தார். இது தொடர்பாக நில அளவையர் சங்கர் என்பவர் கண்ணனை தொடர்பு கொண்டு பட்டாவில் பெயர் மாற்றி தருவதற்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், முதல்கட்டமாக ரூ.5 ஆயிரம் தருமாறு கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கண்ணன், இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கண்ணனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். பின்னர் அவர் சோளம்பள்ளம் பகுதியில் வைத்து நில அளவையர் சங்கரிடம் லஞ்ச பணம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் வாங்கிய சங்கரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கைதான நில அளவையர் சங்கர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பேரில், அவரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து நேற்று உயர் அதிகாரிகள் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளனர்.
Next Story

