கூட்டுறவுத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3,92,000 மதிப்பிலான பயிர் கடனுதவி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவித்தொகை
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (01.09.2025) நடைபெற்றது. கூட்டுறவுத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3,92,000 மதிப்பிலான பயிர் கடனுதவி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவித்தொகை, தமிழ்நாடு மின்சார வாரியம், பெரம்பலூர் சார்பில் 5 பயனாளிகளுக்கு பெயர் மாற்றத்திற்கான ஆணை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், 3 பயனாளிகளுக்கு மீனவர் நலவாரிய உறுப்பினர் அட்டை, வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண்மை இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.14,46,290 மதிப்பில் கிணறு சுற்றுச்சுவர் அமைக்க நிதியுதவி மற்றும் வேளாண் இயந்திரங்கள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் 02 பயனாளிகளுக்கு உழவர் சந்தை அடையாள அட்டை மற்றும் 1 பயனாளிக்கு உழவர் சந்தையில் இயற்கை வேளாண் விளைபொருட்கள் விற்பனைக்கு கடை ஒதுக்கீட்டிற்கான ஆணை என மொத்தம் 22 பயனாளிகளுக்கு ரூ.18,38,290 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியுடைய அனைவருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெறுவதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 362 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சிவக்கொழுந்து, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.சக்திவேல், வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.பாண்டியன், செயற்பொறியாளர் (தமிழ்நாடு மின்சார வாரியம், பெரம்பலூர்) அசோக் குமார் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.அசோக் குமார் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story





