சேலத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

X
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ள பயனாளிகள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் கொண்டவராகவும், அந்த நிலம் மனித குடியிருப்புகளில் இருந்து விலகியும் இருக்க வேண்டும். நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க தேவையான மொத்த செலவில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 625 வரை மாநில அரசால் வழங்கப்படும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணையில் இருந்து 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 2022-23, 2023-24 மற்றும் 2024-25-ம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயன் அடைந்திருக்கக்கூடாது. 3 ஆண்டு காலம் கோழிப்பண்ணையை பராமரிப்பவராக இருத்தல் வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை சந்தித்து உரியபடிவத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story

