உலகப்புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா பெருமராமத்து பணி ரூ.60 லட்சம் நிதி

உலகப்புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா பெருமராமத்து பணி ரூ.60 லட்சம் நிதி
X
தமிழக அரசு வழங்கியது - இஸ்லாமிய அமைப்புகள் நன்றி
தமிழகத்தில் பாரம்பரியமிக்க தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்களை புனரமைக்க தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கி வழங்கி வருகிறது. அதன்படி, முதன்முதலில், உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்தது. இதன்படி, கடந்த ஆண்டு ரூ.1.40 கோடி நிதி வழங்கியது. இதன் மூலம், நாகூர் ஆண்டவர் தர்காவில் பெரும் மராமத்து பணி தொடங்கியது. இந்த மராமத்து பணிகள் அரசு விதிக்குட்பட்டு நடைபெற்று வந்தது. இந்த மராமத்து பணிகள் முறையாக நடைபெற்று வருகிறது என்று, பொதுப்பணித்துறை மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை வழங்கியது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின்படி, தமிழக அரசு மீதமுள்ள ரூ.60 லட்ச ரூபாயை நாகூர் ஆண்டவர் தர்கா நிர்வாகிகள் வசம் சென்னையில் வழங்கியது. இதனை, தமிழ்நாடு அரசு வக்பு வாரிய சேர்மன் நவாஸ் கனி தலைமையில், வாரிய உறுப்பினர்கள் எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ், கான், 'செய்யத் ரேஹான், நவாஸ், பசீர் அஹமத், காஜி உள்ளிட்டோர், நாகூர் ஆண்டவர் தர்கா பரம்பரை டிரஸ்டிகள் ஹாஜி ஹாஜா முகையத்தின் சாஹிப், டாக்டர் செய்யது யூசுப் சாஹிப், ஹாஜி செய்யது முஹம்மது கலிபா சாஹிப், ஹாஜா நஜ்முதீன் சாகிப், ஹாஜி சுல்தான் கலிபா சாஹிப் ஆகியோர் வசம் ரூ.60 லட்சத்துக்கான உத்தரவினை வழங்கினர். இதன் மூலம், நாகூர் தர்காவில், கல் மண்டபம், தர்கா கால்மாட்டு மண்டபம் மற்றும் யாஹுசைன் பள்ளி மண்டபம் ஆகிய இடங்களில், பெருமராமத்து பணிகள் நடைபெறும் என நாகூர் ஆண்டவர் தர்கா பரம்பரை டிரஸ்டிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தொன்மை வாய்ந்த தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்களை புணரமைக்க ஆண்டுதோறும் அரசு நிதி வழங்கி வருவதை, பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.
Next Story