பல்லடம் அருகே 650 ரூபாய்க்கு அரை சவரன் நகை

பல்லடம் அருகே பார்சலை திறந்ததும் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு காத்திருந்த அதிர்ச்சி 650 ரூபாய்க்கு அரை சவரன் நகை.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வலசுப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 27 ஆம் தேதி சென்னையில் இருந்து பெண் ஒருவர் தொலைபேசியில் அழைத்துள்ளார். லக்ஷ்மி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், செந்தில்குமார் பயன்படுத்தும் ஏர்டெல் மொபைல் எண்ணுக்கு குலுக்கல் முறையில் அரை சவரன் தங்க நகை பரிசு விழுந்துள்ளதாகவும், அதை கொரியரில் அனுப்பி வைப்பதாகவும் 650 ரூபாய் மட்டும் பணம் செலுத்தி பரிசு பொருளை வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். செந்தில்குமார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே போன்று 25,000 ரூபாய் மொபைல் போன் பரிசாக வந்துள்ளதாகவும் 1650 ரூபாய் மட்டும் செலுத்தி பரிசு பொருளை வாங்கி கொள்ளுமாறு வந்த தொலைபேசி அழைப்பை நம்பி பணத்தைக் கட்டி பரிசு பொருளை வாங்கி பார்த்த போது 100 ரூபாய் மதிப்பிலான ஹெட் போன் மட்டும் அனுப்பப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் தான் இழந்த பணத்தை ஆறு மாதங்கள் கழித்து செந்தில்குமார் திரும்ப பெற்றுள்ளார். இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணிய செந்தில்குமார் 650 ரூபாய் பணம் செலுத்தி பார்சலை வாங்கியுள்ளார். திறந்து பார்த்தபோது அவர் எதிர்பார்த்தபடியே கவரிங் வளையல்கள் பரிசு பொருளாக அனுப்பப்பட்டிருந்தது. ஏழை மக்களை குறிவைத்து நடக்கும் இந்த மோசடிகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் ஏமாற்றப்பட்டதாகவும் சட்டரீதியாக தான் இழந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டேன் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே மீண்டும் இந்த பொருளை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story