இரண்டு வீடுகளில் 7 சவரன் தாலி சங்கிலி மற்றும் 50,000 ரொக்க பணத்தை திருடி மர்ம நபர்கள்
Perambalur King 24x7 |26 Dec 2025 10:03 PM ISTரோந்து பணியை அதிக ப்படுத்த வேண்டும் அப்போதுதான் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க முடியும் குற்ற சம்பவங்களையும் தடுக்க முடியும் என பொதுமக்கள் வேண்டுகோள்
பெரம்பலூரில் வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போதே கதவை உடைத்து அதிரடியாக உள்ளே சென்று இரண்டு வீடுகளில் 7 சவரன் தாலி சங்கிலி மற்றும் 50,000 ரொக்க பணத்தை திருடி மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் -அரியலூர் சாலையில் நான்கு ரோடு அருகே உள்ள அன்பு நகரில், சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த ராமர்(34) என்பவர் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமர் அவரது குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் நள்ளிரவு அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் ராமர் மனைவி ஐஸ்வர்யாவின் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அவர் சத்தம் போடவே ஓடி வந்த ராமரை காலில், இரும்பு ராடால் தாக்கி விட்டு அருகே படுத்திருந்த, அவரது குழந்தையின் கழுத்தை நெரித்து மிரட்டியதால், வேறு வழியின்றி அமைதியான ஐஸ்வர்யாவின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதேபோல இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் வரகூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலு(57) என்பவரும் அவரது குடும்பத்தினருடன் அறையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் மற்றொரு அறையில் இருந்த பீரோவை திறந்து உள்ளே இருந்து ரூ.50,000 ரொக்க பணத்தையும் திருடி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மோப்ப நாய் சோதனையும், விரல் ரேகை பதிவும் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெரம்பலூர் நகரில் இதுபோன்று பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து திருடிய சம்பவங்கள் போக, தற்போது வீட்டில் உள்ள ஆட்களை தாக்கி, கழுத்தை நெரித்து மிரட்டி திருடி செல்லும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால் பொதுமக்கள் பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.
Next Story


