சுய உதவிக்குழுவினருக்கு ரூ.70 இலட்சம் கடன் உதவி!

சுய உதவிக்குழுவினருக்கு ரூ.70 இலட்சம் கடன் உதவி!
தூத்துக்குடியில் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.70 இலட்சம் கடனுதவியை கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.இராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச்செயலாளர் கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், முன்னிலையில் நான்கு சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 70 மகளிர்களுக்கு ரூ.70 இலட்சம் குழு கடனாகவும், கலைஞரின் கனவு இல்லத்திட்ட கடன் மூலம் ஒரு பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் தலைமைச்செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: உலக மக்களின் வாழ்வாதாரமாகிய விவசாயத்திற்கு உற்ற தோழனாய் விளங்குவது கூட்டுறவு சங்கங்கள் விதை விதைப்பு முதல் அறுவடை வரையிலும் விளைபொருட்களை விற்பனை செய்து இலாபம் ஈட்டுவது வரையிலும் விவசாய பங்காளனாய் இருப்பது கூட்டுறவு சங்கங்கள் என்றால் அது மிகையில்லை. அந்த வகையில் தமிழ்நாடு விவசாயிகளின் பொருளாதாரத்தினை உயர்த்திடும் வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மண்டலத்தில் ஒரு மத்திய கூட்டுறவு வங்கி, 150 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள். 4 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 8 நகர கூட்டுறவு வங்கிகள் உட்பட 264 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தில் உள்ள அனைத்து வகை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மாநிலம் முழுவதும் அனைத்து பிரிவினருக்கும் சீரான பொருளாதார வளர்ச்சி ஏற்பட நடப்பு நிதியாண்டில் ரூ.100 இலட்சம் கோடியும், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பயிர்கடனாக ரூ.67 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 2953 விவசாய உறுப்பினர்களுக்கு ரூ.4111 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் கால்நடை பராமரிப்புக் கடனாக ரூ.99.22 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 5132 நபர்களுக்கு ரூ.45,37 கோடி அளவிற்கு கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 207 உறுப்பினர்களுக்கு ரூ.5.20 கோடிக்கு மத்திய காலக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரை 82757 நபர்களுக்கு ரூ.89262 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சுயஉதவிக்குழுக் கடனாக ரூ.160.33 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 687 குழுக்களுக்கு ரூ.9220 கோடி சுயஉதவிக்குழுக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்குத் தரமான காய்கனிகள் நியாயமான விலையில் கிடைப்பதற்கு ஏதுவாக தூத்துக்குடி மண்டலத்தில் 1 பண்ணை பசுமை காய்கறி கடை செயல்பட்டு வருகிறது. 6 இடங்களில் முதல்வரின் மருந்தகம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறையில் பதிவாளர் அலுவலகம், மண்டல மற்றும் சரக அலுவலகங்களின் மின் அலுவலகமாக (e-office) 28.03.2024 முதல் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் பணிகள் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டுறவு வங்கி/சங்கங்களில் Online வழியாக கடன் விண்ணப்பங்கள் சமர்ப்பித்திட கூட்டுறவு எனும் செயலி உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி/சங்கங்களில் நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ள கடன்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள எதுவாக E தீர்வு எனும் செயலி உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.14.28 கோடி மதிப்பீட்டில் 133 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 522 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். மேலும், சங்கத்திற்கும் 522 இலட்சம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. விவசாயிகள் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை பயன்படுத்திட தூத்துக்குடி மாவட்டத்தில் 34 கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரூ.159:10 இலட்சம் செலவில் டிராக்டர், உழவு இயந்திரம் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சங்கங்களுக்கு மானியத் தொகையாக ரூ.87.51 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 522 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இந்த டிராக்டர் மற்றும் உழவு கருவிகளின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு தனியாரைவிட குறைந்தபட்சம் ரூ.200/- விவசாயிகளுக்கு குறைவாக வாடகைக்கு விடப்படுகிறது. கூட்டுறவின் சேவைகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி மக்களை சென்றடையும் வகையில் 100 இடங்களில் கூட்டுறவுச் சங்கங்களின் கிளைகள் உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர்கஸ்பா, சாத்தான்குளம் மற்றும் கேமணியாச்சி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கிளைகள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. செயல்பாட்டிற்கு இன்று துவங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கப்பட்ட கடன்கள் நடப்பு நிதியாண்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.2210 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1069 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 91 உறுப்பினர்களுக்கு ரூ.263 கோடி தான்ய ஈட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 814 உறுப்பினர்களுக்கு ரூ.3.85 கோடி சிறுவணிகக்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 155 நபர்களுக்கு ரூ.59.00 இலட்சம் அளவில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வு மேம்பட பொருளாதார மற்றும் வருவாய் ஈட்டும் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.10 லட்சம் டாப்செட்கோ கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.86.00 இலட்சம் டாம்கோ கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மண்டல இணைப்பதிவாளர் வெ.முரளிகண்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர் பொ.நடுகாட்டுராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story