சங்கரன்கோவில் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட கழக அவைத் தலைவர் வி.பி மூர்த்தி, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், பொருளாளர் சண்முகையா, பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் அமைச்சர், மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் வி.எம்.ராஜலட்சுமி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பையா பாண்டியன், துணைச் செயலாளர் கண்ணன் (எ) ராஜு உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினார்கள். பொதுக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:- புதிதாக மாவட்ட பொறுப்பாளராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் அதிகாரிகள் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் பதவியில் இருக்க முடியாது என்ற ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பில் வந்ததிலிருந்து திமுகவினர் அதிகாரிகளை மிரட்டுவது, வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. திமுக ஆட்சியில் வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறி பள்ளி மாணவர்களை ஏமாற்றியுள்ளனர். திமுகவினர் இந்தி திணிப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி பாடம் உள்ளது. பெரும்பாலான திமுக நிர்வாகிகளின் குழந்தைகள் இந்தி மொழியை படித்து வருகிறார்கள். திமுக ஆட்சியின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை திமுகவினர் நிறைவேற்றவில்லை. கடந்த சில நாட்களாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணம் அரசு ஊழியர்கள் . திமுகவில் முக்கிய நிர்வாகிகளின் வாரிசுகள் தான் உயர் பதவியில் வர முடியும். ஆனால் அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட உயர் பதவியில் வரலாம். அதிமுக ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக இருந்தனர். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு திருநெல்வேலி மண்டல செயலாளர் சிவ ஆனந்த், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் ராமசாமி என்ற ரவி, பரமகுருநாதன், தீக்கணல் லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். முடிவில் நகர அவை தலைவர் வேலுச்சாமி நன்றி கூறினார்.
Next Story

