காங்கேயத்தில் 8 அரசு பணி வட்டாட்சியர் அறிவிப்பு

X
காங்கேயம் தாலுகாவில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கேயம் வட்டாட்சியர் ஆர்.மோகனன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகாவுக்கு உள்பட்ட பச்சாபாளையம் கிராமம், பழைய கோட்டை கிராமம், மேட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ராசாத்தாவலசு கிராமம், பழையகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட குட்டப்பாளையம் கிராமம், கணபதிபாளையம் கிராமம், வட சின்னாரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காங்கேயம்பாளையம், சம்பந்தம்பாளையம் ஆகிய 8 கிராமங்களுக்கான கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யும் பொருட்டு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும், காங்கேயம் தாலுகா பகுதியில் வசிப்பவராகவும், தமிழில் பிழையின்றி எழுதப் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 21 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதாக 32 மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், பட்டியல் இனத்தவர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து, வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் காங்கேயம் வட்டாட்சியருக்கு பதிவஞ்சல் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை நேரிலும் வழங்கலாம். மேற்கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் அனுப்புவது தொடர்பாக கூடுதல் தகவல் தேவைப்படுவோர் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

