இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் பீடி இலை மூட்டைகள் பறிமுதல்

X
தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் காெண்டு வந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 2பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் விஜய் அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி பாலமுருகன் பேச்சி ராஜா ஆகியோர் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இன்று அதிகாலை புல்லாவெளியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் இலங்கைக்கு கடத்துவதற்காக அசோக் லேலண்ட் படா தோஸ்த் லோடு வாகனத்தில் கொண்டு வந்த சுமார் 30 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பீடி இலைகளும், மற்றொரு வாகனத்தில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 41 மூட்டை பீடி இலைகளும் என மொத்தம் 83 மூட்டைகளில் இருந்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. பிடிபட்டுள்ள பீடி இலை மூட்டைகளின் மொத்த மதிப்பு ரூ/80 லட்சமாகும். இது தொடர்பாக வாகனங்களின் ஓட்டுநர்களான முள்ளக்காடு காந்திநகர் அய்யம்பாண்டி மகன் மதியழகன் (39), திருச்செந்தூர் வெள்ளாளன்விளை சர்ச் தெரு இஸ்ரவேல் மகன் விஷ் பண்ராஜ் பெபின் (29) ஆகிய 2பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

