சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 86 நிறுவனங்கள் மீது வழக்கு

X
சேலம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவையொட்டி தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும், அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தேசிய விடுமுறையான சுதந்திர தினத்தன்று தொழில் நிறுவனங்கள், உணவு கூடங்கள், வணிக வளாகங்களில் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சண்பகராமன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சேலம், மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், சங்ககிரி உள்பட மாவட்டம் முழுவதும் 37 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், 64 உணவு நிறுவனங்கள், 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், 23 கடைகள், 59 உணவு நிறுவனங்கள், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனம் என மொத்தம் 86 நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டம் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Next Story

