சென்னை தி.நகர் துணிக் கடையில் ரூ.9 லட்சம் கொள்ளை - வடமாநில நபர் கைது

X
தி.நகர் நாகேஸ்வர ராவ் சாலையில் 4 மாடி கட்டிடத்தில் பிரபல துணிக்கடை அமைந்துள்ளது. இக்கடையில் மேற்கு மாம்பலம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த அஜித் (47) என்பவர் காசாளராகப் பணி செய்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி இரவு வழக்கம் போல் ஊழியர்கள் கடையை மூடிச் சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, நான்காவது மாடியில் உள்ள பால் சீலிங்கில் அமைக்கப்பட்ட மேற்கூரையை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.9 லட்சத்தை திருடிச் சென்றிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, அஜித் அளித்த புகாரின் பேரில், மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஷ்யாம் சுந்தர் ஷானி(38) மற்றும் அவரது நண்பர் ராகுல் சிங் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீஸார், ஷ்யாம் சுந்தர் ஷானியைக் கைது செய்து, நேற்று சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து, ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள ராகுல் சிங்கை போலீஸார் தேடி வருகின்றனர்.
Next Story

