அரசு பள்ளி மாணவர்கள் 9,000 விதை பந்துகள் தயாரிப்பு

X
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மாசிலா மணி முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், விதைப் பந்துகள் தயாரிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி பங்கேற்று, விதை பந்துகள் தயாரிப்பை துவக்கி வைத்து அதன் அவசியம் மற்றும் பயன்பாடுகள் குறித்து பேசினார். அதை தொடர்ந்து அப்பள்ளியில் பயிலும் 150 மாணவர்கள் ஒன்றிணைந்து, உரத்தோடு சேர்ந்த களிமண்ணில் மர விதைகளை உள்ளே வைத்து பந்து போன்று வடிவமைத்து 9,000 விதைப் பந்துகள் தயார் செய்தனர். இதில், வேம்பு, அத்தி, மலை வேம்பு, புங்கன், சீத்தா, மகிழம், வாகை, வேங்கை, புளி, ஆலமரம், அரசமரம், புன்னை, வில்வம் உள்ளிட்ட மரங்களின் விதைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இந்த விதைப் பந்துகளை விதைக்கும் துவக்க நிகழ்ச்சி, உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் ஏரி பகுதியில் விரைவில் துவங்க உள்ளதாக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் துர்கா தெரிவித்தார். நிகழ்ச்சியில், அப்பள்ளி தலைமை ஆசிரியர் கேசவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரபாகரன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பிரபாவதி உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story

