இந்தியாவுக்கு 99.5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை
கடந்த 2024 ஆம் ஆண்டில் 99.5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வந்தனர் என மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சென்னை மண்டல உதவி இயக்குநர் எஸ்.பத்மாவதி தெரிவித்தார். தஞ்சாவூரில், ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், புதன்கிழமை நடைபெற்ற பயிலரங்கத்தில் அவர் மேலும் பேசியது: சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல, தமிழ்நாட்டிலும் ராமேஸ்வரம், தஞ்சாவூர் பெரிய கோயில், நவக்கிரக கோயில்கள் ஆகிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் ரூ. 25 கோடி மதிப்பில் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், பொருள் விளக்க மையம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் 99.5 லட்சம் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்கு வந்தனர். இவர்களில் 11.61 லட்சம் பேர் தமிழ்நாட்டில் சுற்றிப் பார்த்தனர். இதேபோல, தமிழ்நாட்டில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 3.06 கோடி பேர் வந்து சென்றனர். சில ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது" என்றார் பத்மாவதி. இதையடுத்து நபார்டு உதவிப் பொது மேலாளர் விஸ்வந்த் கண்ணா பேசுகையில்,"காவிரி வடிநிலத்தில் நபார்டு மூலம் ரூ. 3 ஆயிரத்து 384 கோடி மதிப்பில் பாசனக் கட்டுமானங்கள் விரிவாக்குதல், புதுப்பித்தல், நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் காவிரி வடிநிலப் பகுதியில் சாகுபடிப் பரப்பு கூடுதல் போகங்கள் வாயிலாக 78 ஆயிரம் ஏக்கர் அதிகரித்துள்ளது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 4.21 கோடி மதிப்பில் சிறு அரிசி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார். மேலும், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் பிரிவு தென் மண்டல இயக்குநர் (பொ) வி.பழனிசாமி சிறப்புரையாற்றினார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த உச்சிமாகாளி, முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் ஆகியோர் பேசினர். முன்னதாக, சென்னை பத்திரிகை தகவல் பிரிவு இயக்குநர் வி.பழனிசாமி வரவேற்றார். நிறைவாக, துணை இயக்குநர் ஜெ. விஜயலட்சுமி நன்றி கூறினார்.
Next Story



