1,010 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - ரூ.11,31,571 கோடி முதலீடுகள்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

X
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கடல் போக்குவரத்து உற்பத்தி கொள்கையின் மூலம் தூத்துக்குடியில் அமைய உள்ள புதிய கப்பல் கட்டுமான நிறுவனம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை வரலாறு காணாத வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளால் உலக நாடுகளின் முதலீட்டாளர்கள் படையெடுத்து வருகின்றனர். மென்பொருள், மின் உற்பத்திகள், வாகன உற்பத்தி, அதன் உதிரி பொருட்கள் உற்பத்தி, தற்போது காலனி உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களின் உற்பத்தி அளவு 10% என்றால் தமிழ்நாடு 38 முதல் 40 சதவீதம் என்ற பெரிய அளவில் முன்னணியில் உள்ளது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை கொண்டு வரப்படவுள்ளது. நீல பொருளாதரத்தில் கடல் சார் உற்பத்தியில் பெரிய இலக்கு இருந்து வந்தது. சேர, சோழ, பாண்டியர் காலத்தில் இருந்து கடல்சார் வணிகத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது கூட பூம்புகாரில் கடலுக்கடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருந்து வரலாறு தொடங்குகிறது என்பதை முதலமைச்சரின் கூற்றை நிரூபிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துடன் கொச்சின் சீப்யார்டு லிமிடெட் மற்றும் மசாகோன் டாக் கடல் கட்டுமானம் லிமிடெட் என்ற இரு நிறுவனங்கள் தலா 15,000 கோடி ரூபாய் என 30,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன் மூலம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தென்னிந்தியாவில் குறிப்பாக தென் தமிழ்நாட்டில் இப்படி ஒரு கப்பல் கட்டுமான நிறுவனம் அமைவது, உலக அளவில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் அமையும் என்றார். மேலும் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "இந்த இரு நிறுவனங்கள் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விரைவில் தூத்துக்குடியில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. வெகு விரைவில் தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்தி கொள்கை வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் எளிதாக இருக்கிறது. நாங்கள் மிகைப்படுத்தி சொல்லவில்லை என்றார். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மேலும் கூறுகையில், "ஜெர்மனி, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் தேவைப்படும் மனித வளத்தை தயார்படுத்தும் வகையில் பணியாற்றி வருகிறோம். திருப்பூர் பின்னலாடை பிரச்சினை குறித்து ஒன்றிய அரசுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். நல்ல தீர்வு எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். Sensible ஆக சிந்திக்கூடிய பெரிய முதலீட்டாளர்களால் தமிழ்நாட்டை தாண்டி சிந்திக்க முடியாது. தமிழ்நாட்டுக்கான போட்டி மற்ற மாநிலங்களுடன் அல்ல, மற்ற நாடுகளுடன் தான். கடந்த 4 ஆண்டுகளில் பல முன்னணி நிறுவனங்களுடன் 1010-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 11,31,571 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 34 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் தொழில் துறையை அரசியல் ஆக்க நினைப்பது சரியல்ல. தமிழ்நாடு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த காலத்திலும், தவறான தகவலை கொடுத்ததில்லை. பரந்தூர் விமான நிலையம் நிச்சயம் நல்லபடியாக வரும் என தெரிவித்தார்.
Next Story

