108 திவ்ய தேச பெருமாள் தரிசனம் - பக்தர்கள் திரளாக பங்கேற்பு

சேலம் 3 ரோட்டில் உள்ள வரலட்சுமி மகாலில் நேற்று முன்தினம் 108 திவ்ய தேச பெருமாள் தரிசன நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திருச்சி ஸ்ரீரங்கநாதர், திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசாமி, திருப்பாற்கடல் ஸ்ரீபதிநாதர், திருப்பதி ஸ்ரீ திருவேங்கமுடையான் தாயார் பத்மாவதி, திருப்பரமபதம் ஸ்ரீபரமபதநாதர் உள்ளிட்ட 108 பெருமாள்கள் காட்சியளிக்கின்றனர்.
இதையொட்டி தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை கோமாதா பூஜையுடன் விஸ்வரூப தரிசனம், 8 மணிக்கு திருவாராதனம், 9.30 மணிக்கு தீபாராதனை, சாற்றுமுறை, 12 மணி முதல் 1 மணி வரை கல்யாண உற்சவம் (உச்சிக்கால பூஜை), மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஊஞ்சல் சேவை, 7.30 மணிக்கு திருவாராதனம், இரவு 9 மணிக்கு சயன பூஜை, ஏகாந்த சேவை ஆகியவை நடக்கிறது.
இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த தரிசனம் வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் வருகிற 10-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு சகஸ்ர கலச அபிஷேகம், 11-ந் தேதி காலை 8.30 மணிக்கு தோமால சேவை, 14-ந் தேதி காலை 6.30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம், யாகம், ராஜ உபசாரம், மகா தீபாராதனை, சாற்றுமுறை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை சேலம் என்.ஜே. ஈவன்டஸ் ஸ்பார்கிளிங் ஸ்டார்ஸ் நிர்வாக இயக்குனர்கள் நிஷாந்த், விக்னேஷ், ஸ்ரீ ராஜகணேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.
