புகையிலைப் பொருட்கள் விற்பனை - கடைகளுக்கு சீல்
கடைகளுக்கு சீல்
திருச்சி மாவட்டம் திருவெள்ளறை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ரகசிய தகவல் அளித்தனர். தகவலின் பேரில் திருச்சி உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்பு செல்வம் இப்ராஹிம் மற்றும் கந்தவேல் கொண்ட குழுவினர் திருவெள்ளரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சௌக்கியராஜ் கடை மற்றும் அலெக்ஸ் ஸ்டோர் என இரண்டு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இரண்டு கடைகளுக்கும் சீல் வைத்தனர். மேலும் மேல் நடவடிக்கைக்காக மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த அலெக்ஸ் பாண்டியன், ராஜூ உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.