ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

தாரமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

தாரமங்கலம் அருகே மல்லிக்குட்டை பாரதிபுரம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சந்தோஷ் (வயது 12), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் மகன் சுதர்சன் (11). மல்லிக்குட்டையில் அரசு நடுநிலைப் பள்ளியில் சந்தோஷ் 6-ம் வகுப்பும், சுதர்சன் 5-ம் வகுப்பும் படித்து வந்தனர். பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்த இவர்கள் நேற்று காைல 11 மணி அளவில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள மல்லிக்குட்டை ஏரி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

விளையாடி முடித்த பிறகு தனது வீட்டுக்கு அருகே உள்ள மல்லிக்குட்டை ஏரியில் இறங்கி கை, கால்களை கழுவியதாக தெரிகிறது. அப்போது ஏரி சேற்றில் கால் சிக்கி இருவரும் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். அவர்களது கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் 2 சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கினர். இருவரையும் மீட்டு தூக்கி வெளியே கொண்டு வந்தனர். சிறுவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இருவரது உடல்களையும் மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Read MoreRead Less
Next Story