20 பவுன் நகை, 20 லட்சம் பணம் திருட்டு வழக்கில் இருவர் கைது. நகை, பணம் பறிமுதல்
Komarapalayam King 24x7 |16 April 2025 7:19 PM ISTகுமாரபாளையம் அருகே 20 பவுன் நகை, 20 லட்சம் பணம் திருட்டு வழக்கில் இருவர் கைது செய்ததுடன் நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு, விவேகானந்தா கார்டன் பகுதியில் வசிப்பவர் டாக்டர் யுவராஜ், 32. எலும்பு முறிவு டாக்டரான இவர் ஈரோடு தனியார் மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடலூரில் படித்து வருகிறார். இவரது மகன், புளியம்பட்டியில் உள்ள மாமனார் வீட்டில் உள்ளார். யுவராஜின் பெற்றோர் மட்டும் இந்த வீட்டில் உள்ளனர். குழந்தையை பார்க்க, யுவராஜின் பெற்றோர் இருவரும் பிப். 8, காலை 10:30 மணிக்கு புளியம்பட்டி சென்றனர். மறுநாள் மாலை 05:30 மணியளவில் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு, உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த பீரோ உடைக்கபட்டிருந்தது. இது குறித்து யுவராஜுக்கு தகவல் தர, நேரில் வந்து பார்த்த யுவராஜ், நகை, பணம் திருடப்பட்டது உறுதியானது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. குமாரபாளையம் அருகே சானார்பாளையம், நவக்காடு பகுதியில் வசிப்பவர் ராணி, 49. இவரது ஒரே மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. பிப். 8, மாலை 03:45 மணிக்கு, ஓமலூரில் உள்ள உறவினர் வீட்டு, விசேஷத்திற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை 09:30 மணியளவில் வீட்டின் அருகில் வசிக்கும் குமார் என்பவர், வீடு திறந்து உள்ளது, உள்ளே யாரும் இல்லை என்று கூறியுள்ளார். உடனே, நேரில் வந்து பார்த்த போது, நகை பணம் காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் ராணி புகார் கொடுத்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இச்சம்பவத்தில் இரு வீடுகளிலும் சேர்ந்து, 20 பவுன் நகை, 20 லட்சம் பணம் திருடப்பட்டது உறுதியானது. குமாரபாளையம் இது குறித்து விசாரணை செய்து வந்தனர். நேற்று காலை 10:00 மணியளவில், காவேரி நகர், செக்போஸ்ட் அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில், சந்தேகப்படும்படியான நபர்கள் இருவர் நிற்பது கண்டு, அவர்களை அழைத்து விசாரணை செய்தனர். போலீசார் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதில் சொன்னதால், இவர்கள் இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை செய்ததில், போச்சம்பள்ளியை சேர்ந்த சங்கர், 43, தருமபுரியை சேர்ந்த அருண்குமார், 24, என்பதும், மேற்கண்ட இரு திருட்டு சம்பவங்களில் சம்பந்தப்பட்டது இவர்கள்தான் என்பது தெரியவந்தது. இவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 20 பவுன் நகை, 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story


