வைகை அணையில் 2000 கனஅடி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் 2000 கனஅடி நீர் திறப்பு -  வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை திறப்பு

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது கடந்த ஒருமாத காலமாக விட்டுவிட்டு பெய்துவரும் தொடர்மழையால் கடந்தமாதம் பத்தாம்தேதி வைகைஅணை நிரம்பியதை அடுத்து பெரியாறு பாசனப்பகுதி இருபோக சாகுபடி நிலங்களில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது இதையடுத்து கடந்தமாதம் 23 ஆம் தேதி வைகை பூர்வீக பாசன நிலங்களில் மூன்றாம் பாசனப்பகுதி , இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒருபோக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சிவகங்கை மாவட்டத்தின் வைகை பூர்வீக பாசன இரண்டாம் பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 2000 கனஅடி வீதம் ஐந்து நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் வைகை ஆற்றின் வழியே செல்கிறது இதனால் மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை மாவட்டங்களில் வைகை ஆற்றில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வைகை ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கடக்கவோ செல்லவேண்டாம் என நீர்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வைகை அணையின் மொத்தஉயரம் 71 அடி நேற்று அணையின் நீர்மட்டம் 64.70 அடியாக இருந்த நிலையில் இன்று 64.86 அடியாக அதிகரித்துள்ளது நேற்று விநாடிக்கு 1608 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 1492 கனஅடியாக குறைந்துள்ளது வைகை இரண்டாம் பகுதி பாசனத்திற்காக அணையிலிருந்து இன்று காலை முதல் விநாடிக்கு 2000 கனஅடியும் ஏற்கனவே பாசனத்திற்கு கால்வாய் மூலம் திறக்கப்பட்டுள்ள 600 கன அடியும் மதுரை குடிநீருக்காக திறக்கப்பட்ட 69 கனஅடியும் சேர்ந்து மொத்தம் 2669 கன அடி தண்ணீர் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது அணையில் நீர்இருப்பு 4600 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Tags

Next Story