திருப்பூரில் 247 கொள்ளை வழக்குகள் பதிவு

திருப்பூரில் 247 கொள்ளை வழக்குகள் பதிவு

செய்தியாளர்களை சந்தித்த போலீசார்

திருப்பூர் மாநகரில் நடப்பு ஆண்டில் 247 கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ.2.56 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகரில் நடப்பு ஆண்டில் 247 கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ-.2.56 கோடி சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது என போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிவன் தெரிவித்தார். திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினவ் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, திருப்பூர் மாநகரத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தமிழ் தொழிலாளர்கள் தாக்குவதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவியது.

தொடர்ந்து வதந்தி பரப்பியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த அசாதரண சூழ்நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நடப்பு ஆண்டில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்படும் குற்றவாளிகள் மீது தனிக்கவனம் செலுத்தி, 24 வழக்குகளில் 41 பேருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழக்கு விசாரணைகளை முடித்து நீதிமன்றம் மூலமாக சிறை தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரத்தில் கடந்த 2022&ம் ஆண்டு இறுதியில் 11091 வழக்குகள் புலன் விசாரணையில் இருந்து வந்தது. நடப்பு ஆண்டு 4845 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்தை குறைக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி பல நடத்தியுள்ளோம்.

நடப்பு ஆண்டில் விபத்தில் 142 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 17 உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 இடங்களில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் புஷ்பா ஜங்சனில் ஒருவழி பாதையாக மாற்றி உள்ளோம். திருப்பூர் மாநகரில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 76 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோல் கொலை சம்பவம் 22 தான் நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. நடப்பு ஆண்டில் 247 கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 216 வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்துள்ளோம். ரூ.2 கோடியே 96 லட்சத்து 5 ஆயிரத்து 787 சொத்து மதிப்பில், ரூ.2 கோடியே 56 லட்சத்து 24 ஆயிரத்து 517 மதிப்புள்ள நகை உள்ளிட்ட சொத்துகள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

74 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது. சட்டவிரோத கஞ்சா விற்பனை தொடர்பாக 236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 176.370 கிலோ அளவு கஞ்சாவும், கஞ்சா கடத்த பயன்படுத்திய 37 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. இதில் 301 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோல் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 1746 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1757 பேர் கைது செய்யப்பட்டு,

அவர்களிடம் இருந்து 3397.188 கிலோ குட்காவும், கடத்தலுக்கு பயன்படுத்திய 8 இருசக்கர வாகனம், ஒரு 3 சக்கர வாகனம், 4 சக்கர வாகனம் 4 கைப்பற்றப்பட்டது. புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 102 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. லாட்டரி விற்பனை செய்த 225 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 262 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.71லட்சம் பணமும், 14 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. சட்டவிரோதமாக சூதாடிய 641 பேர் மீது 116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.8 லட்சத்து 37 ஆயிரம் பணம் மற்றும் 20 இருசக்கர வாகனம், ஒரு 4 சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 2430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட 2437 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3401 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் 492 உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் முறையாக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டங்களை மீறியதாக 2 லட்சத்து 1 ஆயிரத்து 627 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.12 லட்சத்து 31 ஆயிரத்து 74 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர்கள் வனிதா மற்றும் அபிஷேக் குப்தா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story