கரூர் அருகே 3வீடுகளில் கொள்ளை தம்பதி உள்ளிட்ட 3பேர் கைது

கரூர் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருடிய கணவன்-மனைவி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மணவாடி, பெருமாள் பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் மணி வயது 68. இவர் அப்பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி, வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக்-கஸ்தூரி தம்பதிகள், அண்மையில் பெருமாள் பட்டி காலனி பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுடன் கார்த்தியின் சகோதரர் பிரவீனும் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி, காலை 9 மணி அளவில் கரூருக்கு சென்ற மணி தனது பணிகளை முடித்துவிட்டு மறுநாள் காலையில் வந்துள்ளார்.

அப்போது,அவரது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த பொருட்கள் களவாடப்பட்டிருந்தது. அருகில் உள்ள கீதாவின் வீட்டிலும், சுப்புலட்சுமி வீட்டிலும் வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த ரூபாய் 90 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மணி வெள்ளியணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர் .

இந்நிலையில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட கார்த்தி, அவரது மனைவி கஸ்தூரி, கார்த்தியின் சகோதரர் பிரவீன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து களவாடப்பட்ட பொருட்களை மீட்டனர். மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Next Story