வேலகவுண்டம்பட்டி அருகே ரூ.3.50 லட்சம் பறிமுதல்

வேலகவுண்டம்பட்டி அருகே ரூ.3.50 லட்சம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட பணம் 

வேலகவுண்டம்பட்டி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் முட்டை ஏற்றி வந்த லாரிகளில் ஆவணமில்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.3.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தி பிரிவு ரோடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து நாமக்கல்லுக்கு முட்டைகளை ஏற்றிச் செல்வதற்கான வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரி டிரைவர் கேரளா மாநிலம், எர்ணாகுளம், பாரீஸ் என்பவரது மகன் அஸ்லாம்(27) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி மறைத்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ 2 லட்சத்தை பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

இதேபோல் நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டி பகுதியில் மற்றொரு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த ஒரு முட்டை ஏற்ற வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் முட்டை ஏற்ற வந்த லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள முனியப்பம்பாளையத்தை சேர்ந்த பழனி என்பவரது மகன் சோமசுந்தரம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 300-ஐ பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.‌1 லட்சத்து 50 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story