இலங்கை தமிழர்களுக்கு 3,500 வீடுகள் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

பொங்கல் பண்டிகை முடிந்ததும் இலங்கை தமிழர்களுக்கு 3,500 வீடுகள் வழங்குவதற்கு அடிக்கல் நாட்டப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் வேலூரில் தெரிவித்தார்.

வேலூர் சரகத்தில் உள்ள திருப்பத்தூர், கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள 21 பள்ளிவாசல் பராமரிப்புக்காக மானியம் வழங்கும் நிகழ்ச்சி வேலூரில் இன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநிலம் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு ரூ.1 கோடியே 24 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் , தமிழகத்தில் 134 பள்ளிவாசல்கள் சீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.7 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தர்காவிற்கும் ரூ.6 கோடி ரூபாய் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ. 2 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த உலாமாக்கள் நல வாரியம் மூலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது. என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சிறுபான்மையினை எழை பெண்களுக்கு ஆயிரம் தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் 2,500 தையல் எந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் 5 ஆயிரம் தையல் எந்திரங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமப்பகுதிகளில் வீடற்ற சிறுபான்மையின மக்களுக்க இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்க, ஏக்கர் ரூ.15 லட்சத்தை பெற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்படுகிறது. அதன்படி பொங்கல் பண்டிகை முடிந்து அடுத்த கட்டமாக 3,500 வீடுகள் வழங்குவதற்கு அடிக்கல் நாட்டுப்படும். தமிழக முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.250 கோடி வக்பு வாரிய சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி,கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story