உணவகத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய 4 இளைஞர்கள் கைது

உணவகத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய 4 இளைஞர்கள் கைது

கோப்பு படம் 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகர் கிராமத்தில் உள்ள உணவகத்தில் கடந்த 4 ந்தேதி நள்ளிரவில் பூட்டை உடைத்து ரூ.3,200 பணத்தை திருடிச் சென்ற 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் 30 வயதான விஜயராகவன். இவர் நகர் கிராமத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 4 ம் தேதி மாலை 4 மணி அளவில் சொந்த வேலை காரணமாக தனது உணவகத்தை மூடிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் நேற்று காலை 10 மணி அளவில் உணவகத்துக்கு வந்த போது உணவகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,200 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து விஜயராகவன் லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து லால்குடி போலீசார் விசாரணை செய்து

வந்த நிலையில் லால்குடி அருகே நெருஞ்சாலக்குடி வடக்கு தெருவை சேர்ந்த 19 வயதான சஞ்சய், மேலத்தெருவைச் சேர்ந்த 19 வயதான சுஜித், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான அபிஷேக் மற்றும் கபிரியேல்புரம் கீழத் தெருவைச் சேர்ந்த 19 வயதான அனிஷ் ஆகிய 4 பேர் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story