40 விநாயகர் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு ரோந்து பணி தீவிரம்

விநாயகர் சதுர்த்தி நாளையொட்டி குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் கொலு வைத்த 40 இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் பெரிய அளவிலான 40 விநாயகர் சிலைகள் கொலு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் பாதுகாப்பிற்காக, சில நாட்களுக்கு முன்பு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், சிலை வைப்போருக்கு அறிவுரைகள், விதிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது. வைக்கக்கூடிய விநாயகர் சிலை 10 அடி வரைதான் இருக்க வேண்டும். பிளாஸ் ஆப் பாரிஸ் இல் செய்த சிலையாக இருக்க கூடாது. எளிதில் நீரில் கரையக்கூடிய தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கி வைக்காமல், பாக்ஸ் வடிவ ஒலிபெருக்கி வைக்க வேண்டும். எளிதில் தீப்பற்ற கூடிய பந்தல் அமைக்காமல், தகர கொட்டகை அமைத்து சிலை வைக்க வேண்டும். சிலை வைக்கும் குழுவினர் 5 பேர் கொண்ட குழு அமைத்து, பகல் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாக்க வேண்டும். சிலைகளை விநாயகர் சதுர்த்தி நாளான ஆக. 27ல் வைத்து, ஆக. 29ல், குமாரபாளையம் காவிரி ஆற்றில், நகராட்சி அலுவலகம் அருகே உள்ள காவிரி படித்துறையில் கரைக்க வேண்டும். கோவில்கள், பள்ளிகள், பள்ளி வாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் அருகில் விநாயகர் சிலை வைக்க கூடாது.தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத்துறை, நகாட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் அனுமதி கடிதம் பெற வேண்டும், என இன்ஸ்பெக்டர் விதிமுறைகள் குறித்து கூறினார். ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, குமாரபாளையம் போலீசார், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கற்பக விநாயகர் கோவில் வளாகத்தில் நடந்த விழாவில், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் புதல்வர் தரணிதரன் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, தொடங்கி வைத்தார். இவருடன் நகர செயலர் பாலசுப்ரமணி, நகர துணை செயலர் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலர் குமரேசன், கவுன்சிலர் புருஷோத்தமன், நிர்வாகிகள் ரவி, அர்ச்சுனன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story