இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கஞ்சா - ஒருவர் சந்தேகத்தின் ஒருவர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கஞ்சா - ஒருவர் சந்தேகத்தின் ஒருவர் கைது
இலங்கைக்கு கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான 400 கிலோ கஞ்சா பறிமுதல்: திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

ராமநாதபுரம் தொண்டி கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக மீமீசல் அருகே உள்ள இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ கஞ்சா மூட்டைகளை திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய எஸ்.பி பட்டினத்தைச் சேர்ந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, எஸ் பி பட்டினம், தேவிபட்டினம், மரைக்காயர்பட்டினம், வேதாளை, தங்கச்சிமடம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகள் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக இலங்கைக்கு சட்டவிரோதமாக நாட்டு படகுகளில் கஞ்சா, கடல் அட்டை, சமையல் மஞ்சள், ஏலக்காய், கடல் குதிரை உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.

இந்த கடத்தல் சம்பவத்தை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார்,இந்திய கடற்படை, கடலோர காவல் படை, சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு தொண்டியில் இருந்து நாட்டுப்படகில் கடல் வழியாக கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்த இருப்பதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை முதன்மை ஆணையர் ரவிச்சந்திரனுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் திருச்சி சுங்கத்துறை கண்காணிப்பாளர் கண்ணதாசன் தலைமையிலான அதிகாரிகள் ராமநாதபுரம் மாவட்ட எல்லை பகுதியான எஸ்பி பட்டினத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் என்னம்கோட்டை வரை கடற்கரை ஓரம் உள்ள மீன் கம்பெனிகள், இறால் பண்ணைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் என்னம்கோட்டை அருகே உள்ள இறால் பண்ணையில் சோதனை செய்த போது இலங்கைக்கு கடத்துவதற்காக சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 400 கிலோ கஞ்சா பொட்டலங்கள் சாக்கு மூட்டைகளில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் எஸ்.பி பட்டினத்தை சேர்ந்த சுல்தான் என்பதற்கு சொந்தமான இறால் பண்ணையிலிருந்து இந்த கஞ்சா மூட்டைகள் எடுக்கப்பட்டதாகவும் மூன்று பேர் கொண்ட குழு இன்று இரவு இதனை நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.60 லட்சம் இருக்கலாம் எனவும் தொடர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய எஸ் பி பட்டினத்தை சேர்ந்த சுல்தான் உள்ளிட்ட நபர்களை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கடற்கரை ஓரம் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்படும் எனவும், கடத்தலுக்கு மீனவர்கள் யாரும் உதவ வேண்டாம் என திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story