ஒடுகத்தூர் அருகே தம்பதியை தாக்கிய 5 பேர் கைது

ஒடுகத்தூர் அருகே தம்பதியை தாக்கிய 5 பேர் கைது

கோப்பு படம் 

ஒடுகத்தூர் அருகே கணவன் மனைவியை தாக்கிய 5 பேரை வேப்பங்குப்பம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாகராஜன் கைது செய்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (35). இவரது மனைவி ரூபினி (30). இருவரும் வேலூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஆசனாம்பட்டு கிராமத்தில் நடந்த தேசத்து மாரியம்மன் கோவில் சிரசு திருவிழாவில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அப்போது எல்லப்பன்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழா முடிந்ததை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

இதனால், சிலர் குடிபோதையில் அந்த வழியாக சென்றவர்கள் மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சிலம்பரசன் மற்றும் அவரது மனைவி ரூபினி மீதும் மஞ்சள் நீரை ஊற்றி உள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, மதுபோதையில் இருந்த அதே கிராமத்தை சேர்ந்த நவீன்குமார் (21), விஷ்ணு (28), சபரி (27), சந்திரன் (26), கல்லு என்கிற முருகன் (40) ஆகிய 5 பேரும் சிலம்பரசனை தாக்கியுள்ளனர்.

இதனை, தட்டிக்கேட்ட அவரது மனைவியையும் ஆபாசமாக பேசி, அவரையும் தாக்கி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி உள்ளனர். அங்கிருந்தவர், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் 5 பேரும் கணவன், மனைவி இருவரையும் வழிமறித்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, சிலம்பரசன் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தார்.

Tags

Next Story