கஞ்சா கடத்திய மூதாட்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

பைல் படம்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே கஞ்சா கடத்துவதாக, 2020 பிப்., 11ல் காஞ்சிபுரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்குதகவல் கிடைத்தது. இதையடுத்து, பெரிய காஞ்சிபுரம் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போலீசார், பெரிய காஞ்சிபுரம்,பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த பவானி, 60, என்ற பெண்ணை பிடித்துவிசாரித்தனர்.
அவர் வைத்திருந்த அரிசி மூட்டையில், 2 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து பவானியை கைது செய்தனர். வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மைநீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்குவந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன. எனவே, பவானிக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிதீர்ப்பளித்தார்.