தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் ரூ.5 ஆயிரம் கோடி சேதம்

கனமழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ரூ.5 ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மழை வெள்ள சேதங்கள் குறித்து நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் நேற்று தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளிதார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய ஆய்வு குழுவினர் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதிகளை ஆய்வு செய்கின்றனர். ஆய்வின் படி பல்வேறு சேதாரங்கள் கணக்கிட்டு விவசாய நிலங்கள், மீனவ படகுகள் சேதாரங்கள், உயிர்பலி எல்லாவற்றையும் கணக்கிட்டு ஒரு தொகுப்பாக தயார் செய்து அதன் மூலமாக இழப்பீடுகளை வாங்குவதற்கு உண்டான பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தொடர்ந்து 2 நாட்கள் இந்த ஆய்வு நடக்கிறது.

குறைந்தபட்சம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி சேதாரம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் முழு சேதாரம், உயிர்பலி குறித்து தற்போது கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. முழு விவரங்கள் விரைவில் தெரியவரும். தூத்துக்குடி மாவட்டத்தில் 40 இடங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. ராணுவம் என்.டி.ஆர்.எப் போன்ற பயிற்சி வாய்ந்தவர்கள் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. ஹெலிகாப்டர்கள் ஒரு நாளைக்கு தேவைக்கு தகுந்த மாதிரி அனுப்பப்படுகிறது. தற்போது 10 ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை மீட்டு வருகிறோம். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்பில் ஈடுபட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 கம்பெனி ராணுவ படையினர் வந்து உள்ளனர். தேவை ஏற்பட்டால் முழு ஆதரவு கொடுப்பதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story