சேலம் தனியார் மருத்துவமனையில் ரூ.59 லட்சம் மோசடி

சேலம் தனியார் மருத்துவமனையில் ரூ.59 லட்சம் மோசடி

கோப்பு படம்

சேலம் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சுமார் ரூ.59 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

சேலம் சுவர்ணபுரி பகுதியை சேர்ந்தவர் டாக்டர் லோகநாதன். இவர் அழகாபுரம் பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். லோகநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- என்னுடைய ஆஸ்பத்திரியில் மருந்து பிரிவில் நாழிக்கல்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

இவர் தான் மருத்துவமனைக்கு தேவையான மருந்துகளை கொள்முதல் செய்யும் பணி செய்தார். இதனிடையே கணக்குகளை ஆய்வு செய்த போது அவர் மருந்துகளை வாங்கியது மற்றும் விற்பனை செய்த வகையில் ரூ.59 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும் அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவுக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆஸ்பத்திரியில் ரூ.59 லட்சம் மோசடி செய்ததாக மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story