83 மாதங்களாக பிடித்தம் செய்யப்படும் சேமநலநிதி அரசு கணக்கில் வரவு வைக்கப்படாததை கண்டித்து
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்தபோது, நாகையில் 1958 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட வலிவலம் தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி மிகவும் பெயர்பெற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கும் இந்த தொழில்நுட்பக் கல்லூரியில், 96 பணியிடங்கள் உள்ள நிலையில், தற்போது 33 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே பணிபுரிவதால் கடும் சிரமத்திற்கு மத்தியில் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஒரு வருடமாக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காத காரணத்தால் கடும் சிரமத்தை சந்தித்து வருவதுடன், பேராசிரியர்களுக்கு 83 மாதங்களாக பிடித்தம் செய்யப்படும் சேமநலநிதியும் அரசு கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை. இதை கண்டித்து, கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரியின் உள்ளே சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்தபடி பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் இன்றி ஓய்வு பெற்றவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஒரு வருடமாக ஊதியம் வழங்காத காரணத்தினால், கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், அன்றாட தேவைகளுக்கே அல்லல்படுவதாகவும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். முறையற்ற ஊதியம், சேமநல நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் இருப்பதால், இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story




