ஜமாபந்தி நிறைவு நாளில் 87 மனுக்களுக்கு தீர்வு

ஊத்தங்கரையில் ஜமாபந்தி நிறைவு நாளில் 87 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது; மீதமுள்ள தகுதியான மனுக்கள் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊத்தங்கரையில் ஜமாபந்தி நிறைவு நாளில் 87 மனுக்களுக்கு தீர்வு. தகுதியானமனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 14 முதல் 21 வரை சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி, ஊத்தங்கரை, கல்லாவி ஆகிய உள்வட்டத்திற்குட்பட்ட 185 கிராமங்களுக்கு 1433 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது.

இந்த உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, பட்டா ரத்து, ஆக்கிரமிப்பு, புதிய குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கல், கிராம கணக்கில் மாற்றம், இதர துறை மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1,800 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் உடனடி நடவடிக்கையாக 87 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள தகுதியான மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் பேசும்போது, வருவாய் துறை சார்பாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில் குறிப்பாக பட்டா பெயர் மாற்றம், தனி பட்டா, வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகளை வழங்கி வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் கோரி தங்கள் இருப்பிடத்திற்கு அருகேயுள்ள இ}சேவை மையம் மூலம் விண்ணப்பித்து, இணையதளம் வாயிலாகவே பெற்றுக்கொள்ளலாம். இதனால் நீங்கள் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை செல்ல தேவையில்லை. அதேப்போல முன்பெல்லாம் பட்டா பெயர் மாற்றுதல் மற்றும் தனி பட்டா கோரி விண்ணப்பிக்கும் போது நீண்ட நாள் நிலுவையில் இருந்த பட்சத்தில் தற்போது தமிழக அரசு அனைத்து வட்டங்களுக்கும் தேவையான நில அளவையர்களை நியமித்துள்ளது. தற்போது விரைந்த பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்பொழுது மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்.

ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்கும் விதமாக அரசு அவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு, மதிய உணவு, விலையில்லா புத்தகம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. எனவே உங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி அவர்கள் உயர்கல்வி பெற்றிட வழிவகை செய்ய வேண்டும். நமது மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குழந்தை திருமணங்களை ஊக்குவிக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்தார்.

நிறைவு விழாவில், ஜமாபந்தி நடைபெற்ற நாட்களில் பெறப்பட்ட தகுதிவாய்ந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கையாக வருவாய் துறை சார்பாக 82 பயனாளிகளுக்கு இணைய வழி பட்டா, நத்தம் பட்டா, உட்பிரிவு பட்டா மற்றும் வீட்டு மனைப் பட்டாக்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 5 பயனாளிகளுக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகைகள் என மொத்தம் 87 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Tags

Next Story