திருப்பூர் கலைவாணி தியேட்டர் அருகில் உள்ள பனியன் கம்பெனியில் தீ விபத்து!

திருப்பூர் கலைவாணி தியேட்டர் அருகில் உள்ள பனியன் கம்பெனியில் தீ விபத்து!

 தீ விபத்து

திருப்பூர் கலைவாணி தியேட்டர் அருகில் உள்ள பனியன் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு போலிசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு , இவர் தனது நண்பர் ஜெகதீஷ் என்பவருடன் கூட்டு சேர்ந்து கலைவாணி தியேட்டர் அருகில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். மூன்று மாடி கொண்ட கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் இவரது பின்னலாடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

முதல் மற்றும் மூன்றாவது தளத்தில் செந்தில் என்பவர் பின்னலாடை நிறுவனம் வைத்துள்ளார். இரண்டாவது தளத்தில் உள்ள பின்னலாடை நிறுவனத்தின் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 8.10 மணியளவில் பின்னலாடை நிறுவனத்தின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பனியன் துணிகள் மற்றும் அட்டைப் பெட்டிகளில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது சற்று நேரத்தில் தீ மளமளவென முதல் தளம் முழுவதும் பரவியது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பனியன் நிறுவன ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

மேலும் தீயை அணைக்க முயன்றனர் ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் கிடைத்ததும் இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் பின்னலாடை நிறுவனத்தில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள் மற்றும் அட்டைப்பெட்டிகள் எரிந்து சேதமானது.

தொடர்ந்து முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் தீ விபத்தில் வெப்பத்தின் காரணமாக சேதமடைந்தது. விபத்து குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story