சின்னம்மாபேட்டையில் பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையம்

சின்னம்மாபேட்டையில் பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையம்

பூட்டி கிடக்கும் காவல் நிலையம்

சின்னம்மாபேட்டையில் புறக்காவல் நிலையம் பூட்டி கிடப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருவாலங்காடு ஒன்றியம் தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில், அமைந்துள்ளது சின்னம்மாபேட்டை கிராமம். இங்கு திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளதால் 24 மணிநேரமும் மக்கள் புழக்கம் இருந்து வருகிறது. தினமும் சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்வர்.

டாஸ்மாக் உள்ளதால் குடிமகன்களின் தொல்லை, கஞ்சா வாலிபர்களின் தொடர் அட்டகாசம் உள்ளதால், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை கருதி இப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு ஜூலை மாதம் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

ஆனால் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு ஓராண்டு ஆகாத நிலையில் 3 மாதங்களாக காவலர்கள் வராத காரணத்தால் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: புறக்காவல் நிலையம் திறந்ததும், சாலையில் மதுகுடிப்பது, கஞ்சா விற்பது, குடிமகன்கள், கஞ்சா, வாலிபர்களின் அட்டகாசம் குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் தலைதுாக்கி உள்ளது.

இதனால் மக்கள் அச்சமடைகின்றனர். புறக்காவல் நிலையத்தில் அனைத்து வசதியும் ஏற்படுத்தியும் காவலர்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. உயரதிகாரிகள் புறக்காவல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story