நிச்சயித்த பெண்ணுடன் காஞ்சி சென்றவர் தற்கொலை

நிச்சயித்த பெண்ணுடன் காஞ்சி சென்றவர் தற்கொலை

காவல் நிலையம் 

நிச்சயித்த பெண்ணுடன் காஞ்சி சென்றவர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை பழவந்தாங்கலைச் சேர்ந்தவர் சேது, 28. இவர், ஸ்ரீபெரும்புதுாரில் தங்கி, சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவருக்கும், சக ஊழியரான கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அபிநயா, 22, என்பவருக்கும், சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவில்களில் தரிசனம் செய்ய இருவரும், காஞ்சிபுரத்திற்கு நேற்று முன்தினம் சென்றனர். அங்கு, எண்ணெய்க்கார தெருவில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். குளிக்க சென்ற அபிநயா, மாலை 4:00 மணியளவில் குளியல் அறையில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது, சேது மின் விசிறியில், துணியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தகவலறிந்த, விஷ்ணுகாஞ்சி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 'திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அபிநயா வேறு ஒருவருடன் பழகுவதாக சேதுவுக்கு சந்தேகம் இருந்துள்ளது.

இதனால், விரக்தியடைந்தவர் தற்கொலை செய்திருக்கலாம்,'' என, போலீசார் தெரிவித்தனர். அபிநயாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story