படைப்பாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்களின் பாச சந்திப்பு

படைப்பாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்களின் பாச சந்திப்பு
பாசச் சந்திப்பு நிகழ்வு
தஞ்சாவூரில் நடந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட படைப்பாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் பாசச் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 40 ஆண்டு கால படைப்பாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள், இசைக் கலைஞர்கள், வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், திரைக் கலைஞர்கள், ஊடகத்தினர் என ஏறத்தாழ 750 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை முனைவர் கண்ணன் அடிகள் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியது: ஓடுகிற தண்ணீரை தடுத்து நிறுத்தி விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த விஞ்ஞானி கரிகால் பெருவளத்தான் இந்த மண்ணைச் சேர்ந்தவர்தான். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்துள்ள தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவன் மாமன்னன் ராஜராஜசோழன். இவரது மகன் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை கட்டினான். மூவேந்தர்களில் தலைசிறந்தவர்களாக சோழப் பேரரசர்கள் திகழ்ந்தனர்.

இப்பெருமையை மீண்டும் நிருபிக்கும் விதமாக இந்த மண்ணின் கலை, இலக்கிய படைப்பாளர்கள் உள்ளனர். தஞ்சாவூர் படைப்பாளர்களின் சிந்தனைக்கு வயதில்லை. இவர்கள் பெரிய கோயில் போன்று வாழ்வர்" என்றார் செழியன். இதைத் தொடர்ந்து, படைப்பாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள், இசைக் கலைஞர்கள், வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், திரைக் கலைஞர்கள் ஆகியோர் மேடையில் அமர்ந்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். மேலும், ஒவ்வொரு படைப்பாளியின் விவரக்குறிப்புகளும் பதிவு செய்யப்பட்டன. இந்நிகழ்வையொட்டி, புகைப்படம் மற்றும் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.

இதில், 20 - 30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் படைப்பாளர்கள் கலந்து கொண்ட பழைய புகைப்படங்கள், சிறப்பு விருந்தினர்களுடனான புகைப்படங்கள், எழுத்தாளர்கள் வெளியிட்ட நூல்களில் சில போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிகழ்வில், தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் பேசினர். இந்தச் சந்திப்பை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இரா.செழியன் தலைமையில் புலவர் மா. கந்தசாமி, தாமரை இதழ் ஆசிரியர் சி.மகேந்திரன், திரைப்பட இயக்குநர்கள் ராசி.மணிவாசகன், கணேஷ்பாபு, நெறியாளர் ஜோ.மகேஸ்வரன், பொறியாளர் வி. விடுதலைவேந்தன், மகாராஜா ரெடிமேட்ஸ் எம்.எஸ்.ஆசிப் அலி, எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் இராசு. தமிழடியான், மருத்துவர் சுபாஷ் காந்தி, ஆசிரியர் அமர்நாத், கவிஞர் சிவராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Tags

Next Story