கோனேட்டம்பேட்டையில் எளிமையான தண்ணீர் பந்தல்

கோனேட்டம்பேட்டையில் எளிமையான தண்ணீர் பந்தல்

தண்ணீர் பந்தல்

கோனேட்டம்பேட்டையில் எளிமையான தண்ணீர் பந்தல்
கோடையில் நிறுவப்படும் தண்ணீர் பந்தல்களில், அந்த அமைப்பு அல்லது அவர்கள் சார்ந்த அரசியல் கட்சியின் விளம்பர பதாகைகள் இடம் பெறுவது வழக்கமாக உள்ளது. இது தவிர, துவக்க நாளில் மட்டும், மோர், இளநீர், தர்பூசணி என தடபுடலாக கவனிக்கப்படும். அடுத்தடுத்த நாட்களில் தண்ணீர் மட்டும் இருக்கும். சில இடங்களில் அதுவும் இருக்காது. இந்நிலையில், பள்ளிப்பட்டு அடுத்த கோனேட்டம் பேட்டையில், நகரி செல்லும் சாலையை ஒட்டி கிராம பொதுகுளம் அமைந்துள்ளது. குளக்கரையில் உள்ள ஆலமரத்தின் அடியில், தென்னங்கீற்று பந்தல் அமைத்து, அதில் மண் பானையில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பந்தலை அமைத்து, அங்கு தினசரி தண்ணீர் நிரப்பி பராமரிப்பது யார் என்ற விவரம் ஏதும் அங்கு குறிப்பிடப்படவில்லை. ஆனால், மண் பானையில் தண்ணீர் மட்டும் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகிறது. தண்ணீர் பந்தல் என்பதற்கான உண்மையான அடையாளத்துடன் செயல்பட்டு வரும் இந்த பந்தலில், அந்த வழியாக செல்பவர்களும், எதிரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்து செல்பவர்களும் தாகம் தனித்து செல்கின்றனர்.

Tags

Next Story