பட்டுக்கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து 

பட்டுக்கோட்டையில் முக்கிய வணிக வளாகங்கள் நிறைந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் முக்கிய வணிக வளாகங்கள் நிறைந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீ பரவாமல் தடுத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியான, அறந்தாங்கி சாலை பகுதியில் பல வணிக நிறுவனங்கள் உள்ளன. அந்தப் பகுதியில், வியாழக்கிழமை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகா கார் ஒன்று திடீரென புகை விட்டு எரியத் தொடங்கியது. இதனால் பதட்டம் அடைந்த அருகில் இருந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் பட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும், ரசாயனப் புகையை அடித்தும், தீ பரவாமல் தடுத்தனர். இதனால் நகரின் முக்கிய பகுதியில் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கார் உரிமையாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வந்து பார்த்த போது காரின், பேட்டரியில் மின்கசிவு காரணமாக தீ பற்றியது தெரியவந்தது. நகரின் முக்கிய பகுதியில் திடீரென கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story