பள்ளியில் நடந்த வித்தியாசமான கார் கண்காட்சி 

பேராவூரணி தனியார் பள்ளியில் நடந்த புதிய வகை கார்களின் கண்காட்சியில், மாணவர்கள் கார்களை சந்தைப்படுத்தினர்.

பேராவூரணி அருகே தனியார் பள்ளியில் கார் கண்காட்சி நடைபெற்றது. இதில், புது வகையான கார்களின் டெக்னாலஜி குறித்து, 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் விளக்கம் அளித்தது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வீரியங்கோட்டையில் அட்லாண்டிக் பன்னாட்டு பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், 20k24 என்ற, புதிய வகை மாடல் கார்களின் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். தாளாளர் ஜனனி சீனிவாசன் கண்காட்சியை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சிலம்பு செல்வன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், மகேந்திரா ஸ்கார்பியோ, தார், ஹுண்டாய் வெரினோ, மாருதி ஸ்விப்ட், டொயோட்டா ஹை ரைடர், டாடா சபாரி உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்களின் 30 க்கும் மேற்பட்ட கார்கள் இடம் பெற்றன. இதில் பள்ளியில் 6, 7, 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புது வகையான கார்களின் டெக்னாலஜி குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். அப்போது காரின் மாடல், பெட்ரோல் காரா, டீசல் காரா, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, எவ்வளவு கிலோமீட்டர் கொடுக்கும், மற்றும் அந்த காரில் உள்ள சென்சார், பிரேக்கிங் சிஸ்டம், ஆட்டோமேடிக், மேனுவல் கியர் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

மேலும், வங்கிக்கடன் பெறும் நடைமுறைகள், காப்பீடு செய்யும் வழிமுறைகள் குறித்தும் கைதேர்ந்த விற்பனை பிரதிநிதிகள் போல் விளக்கம் அளித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த கார் கண்காட்சியை நூற்றுக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். இதில், 140 மாணவர்கள் கலந்து கொண்டு கார்கள் குறித்து விளக்கம் அளித்தனர். பெட்டி செய்தி கண்காட்சியில் விளக்கம் அளித்துக் கொண்டிருந்த 6 ஆம் வகுப்பு மாணவி காயத்ரியிடம், பெட்ரோல், டீசல் விலை கட்டுபடியாகாத நிலையில், தண்ணீரை எரிபொருளாகக் கொண்டு ஓடும் கார் கண்டுபிடிக்கப்படுமா என பார்வையாளர் ஒருவர் கேட்டதற்கு, தற்போதே மினரல் வாட்டர் ஒரு லிட்டர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காருக்கு எரிபொருளாக தண்ணீர் பயன்படுத்தும் சூழல் உருவானால், தண்ணீர் விலையையும் தயாரிப்பு நிறுவனங்கள் உயர்த்தி விடும் என்று பதில் அளித்தது, இன்றைய கார்ப்பரேட் உலகத்தை தோலுரித்துக் காட்டியதுடன், மாணவியின் அறிவார்ந்த பதில், பலரையும் புருவத்தை உயர்த்த வைத்தது.

Tags

Next Story