அசிங்கமாகப் பேசியவர் மீது நடவடிக்கை கோரி மகளிர் குழுவினர் போலீசில் புகார்.
காவல்நிலையத்தில் புகார் மனு
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு கிராமத்தில் 24 மகளிர் குழுக்கள் இயங்கி வருகிறது. இந்தக் குழுவினர் பூக்கடை, கருவாடு வியாபாரம், மீன் வியாபாரம், கறவை மாடு வாங்கி பால் வியாபாரம், சிறு கடைகள் வைத்தும் பல்வேறு சுயத்தொழில் செய்து வருகின்றனர். இந்த மகளிர் குழுவின் தலைவராக பவானி என்பவர் இருந்து வருகின்றார். இந்தக் குழுவினருக்கு அரசு பேங்க் ஆப் பரோடா வங்கி மூலமாக ரூ.1 கோடியே 50 லட்சம் கடன் உதவி வழங்க இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த முனியன் மகன் பாலகிருஷ்ணன் என்பவர் இந்த 24 மகளிர் குழுவினருக்கும் கடன் உதவி வழங்க கூடாது என்றும், மகளிர் குழுவினரை அசிங்கமாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் மகளிர் குழுவினர் திரண்டு சென்று புகார் மனு அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.