மனைவியை கொடூரமாக தாக்கும் இளைஞர் - வீடியோ வைரல்.
![மனைவியை கொடூரமாக தாக்கும் இளைஞர் - வீடியோ வைரல். மனைவியை கொடூரமாக தாக்கும் இளைஞர் - வீடியோ வைரல்.](https://king24x7.com/h-upload/2024/04/28/492715-image3a1000497994.webp)
வீடியோ காட்சி
கோயம்பேடு மேம்பாலத்தில் நேற்று மதியம் 2 மணி அளவில் பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு இளைஞன் மற்றும் இளம் பெண் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. திடீரென இருசக்கர வாகனத்தை நிறுத்திய அந்த இளைஞர் தன்னுடன் வந்த பெண்ணை சரமாரியாக கைகளால் தாக்கியதுடன் ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
பல நபர்கள் வேடிக்கை பார்த்தபடி செல்ல அந்த இளைஞன் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கியதில் இளம்பெண் சற்று நேரத்தில் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அவ்வழியாக சென்ற சிலர் இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். சிறிது நேரம் கழித்து இளம் பெண்ணை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து அந்த இளைஞர் அழைத்து சென்றுள்ளார். பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக கைகளாலும் ஹெல்மட்டாலும் தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் என்பவர் ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
தன்னுடன் வந்த இளம் பெண்ணை தாக்கிய பிறகு மயக்கம் அடைந்து கிடந்த இளம் பெண்ணை எழுப்புவதற்கு உதவி கேட்ட இளைஞரின் வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் பதிவான வண்டி எண்ணை வைத்து, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரோஷன் என்பவரை கோயம்பேடு போலீசார் அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண் சந்தியா எனவும், அவர் ரோஷனின் மனைவி என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், குடும்ப பிரச்சினை காரணமாக வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.