பேராவூரணியில் இளம் பெண் படுகொலை செய்யப்பட்டார்

பேராவூரணியில் இளம் பெண்ணின் தலையில் கல்லை தூக்கிப் போட்டுக் கொன்ற காதலன் தப்பியோட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பொன்னாங்கண்ணிக்காடு ஆனந்தவல்லிபுரம் வாய்க்கால் தென்கரை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 51), இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 40), இத்தம்பதிகளுக்கு நந்தகுமார் (20), பிரகாஷ் (18), என்ற இரு மகன்களும் அம்மு என்ற சிவஜோதி (வயது 19) என்ற மகளும் உள்ளனர். சிவகுமார் பேராவூரணி அரசு மருத்துவமனையில் இருந்து பணி மாறுதலில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சமையலராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

கோவிந்தம்மாள் பேராவூரணி ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள சிவஜோதி வீட்டிலேயே இருந்துள்ளார். இவர்கள் ஏற்கனவே பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரே செக்கடித்தோப்பு என்ற பகுதியில் குடியிருந்து வந்துள்ளனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புனல்வாசல் பகுதியை சேர்ந்த காளி என்ற காளீஸ்வரன் (வயது 23) பேராவூரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்சில் ஓட்டுனராகவும், லாரி ஓட்டுநராகவும் பணியாற்றி வந்துள்ளார். அப்போது காளீஸ்வரனுக்கும் சிவஜோதிக்கும் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதற்கு பெண்ணின் பெற்றோர் பச்சைக்கொடி காட்டி உள்ளனர். இந்நிலையில் காளீஸ்வரன் அடிக்கடி சிவஜோதி வீட்டிற்கு சகஜமாக சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் ஓராண்டுக்கு முன் பேராவூரணியை விட்டு காளீஸ்வரன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இருந்தபோதிலும் காளீஸ்வரனுக்கும் சிவஜோதியும் தொலைபேசி மூலம் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரனுக்கு சொந்த ஊரில் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் ஆன தகவல் தெரிந்த பிறகு சிவஜோதி காளீஸ்வரனுடன் பேசாமல் இருந்துள்ளார். செல்போன் மூலம் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காளீஸ்வரன் பொன்னாங்கண்ணிக்காடு ஆனந்தவல்லி வாய்க்கால் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடி இருந்த சிவஜோதியை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

குடிபோதையில் இருந்த காளீஸ்வரன் சிவஜோதியுடன் சண்டையிட்டுள்ளார். தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு, "திருமணம் ஆன உன்னுடன் வரமாட்டேன்" என சிவஜோதி மறுப்பு தெரிவித்துள்ளார். தகராறு முற்றவே சிவஜோதியின் பெற்றோர்கள் பேராவூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து வந்த காவலர்கள் காளீஸ்வரனை கண்டித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் சாப்பிட்டு விட்டு சிவஜோதி, அவரது சகோதரர்கள், பெற்றவர்கள் படுத்து உறங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று புதன்கிழமை அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் வீட்டின் கதவை தட்டி உள்ளே சென்ற காளீஸ்வரன் மீண்டும் சிவஜோதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தன்னுடன் வந்து விடுமாறு சிவஜோதியை அவர் மீண்டும் அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிவஜோதி மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வீட்டின் கதவின் பின்புறம் இருந்த முண்டுக்கல்லை எடுத்து சிவ ஜோதி தலையில் காளீஸ்வரன் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிவஜோதி துடிதுடித்து இறந்தார். இதை அடுத்து சிவஜோதியின் சகோதரர்கள் அவனை தாக்கி பிடிக்க முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து அவர் தப்பித்து ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி காவல்துறையினர் சடலத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய காளீஸ்வரனை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடய அறிவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு, அது சிறிது தூரம் ஓடி நின்றது. காதலித்த இளம் பெண், திருமணமான தன்னுடன் வராமல் தவிர்க்கவே ஆத்திரமடைந்த அவளுடைய காதலன் கல்லை தலையில் தூக்கி போட்டு கொன்ற சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story