மாசி முதல் ஞாயிறு- நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

மாசி முதல் ஞாயிறு- நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

சிறப்பு அபிஷேகம்

மாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.

நாமக்கல் நகரில் சுமார் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.அனுமன் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ் மற்றும் தெலுங்கு வருட பிறப்புகளின்போதும், தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமைகளிலும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவு வருகை புரிவர். மார்கழி, தை, மாசி மாதங்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வெண்ணெய் காப்பு அலங்காரம் நடைபெறும்.

மொத்தம் 110 கிலோ வெண்ணெய் பயன்படுத்தி பட்டாச்சாரியர்கள் சுமார் 5 மணி நேரம் அலங்காரம் செய்வார்கள், பின்னர் திரை விலக்கப்பட்டு மஹா தீபாராதனை நடைபெறும். மற்ற நாட்களில் கட்டளைதாரர்கள் விருப்பப்படி தங்க கவசம், வெள்ளி கவசம், முத்தங்கி, சந்தனக் காப்பு, புஷ்பங்கி, வடமாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சை மாலை போன்ற அலங்காரத்தில் ஆஞ்சநேயர் தரிசனம் தருவார்.

அதே போன்று இன்று மாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் ஆஞ்சநேயர் சாமிக்கு நடைபெற்றது. காலை 10 மணிக்கு வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்களும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story