கார் ஓட்டி பழகிய போது விபத்து - 2 சிறுவர்கள் பலி

பரமத்தி வேலூர் அருகே கபிலர்மலையில் கார் ஓட்டி பழகும் போது காரின் மீது மற்றோர் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அடுத்த பெரியமருதூர் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகன் சுதர்சனம் (14), அதேப்பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் லோகேஷ் (17) ஆகிய இருவரும் லோகேஷின் தந்தை ராமசாமியின் ஆம்னி வேனை எடுத்துக்கொண்டு நேற்று இரவு 11 மணிக்கு கபிலர்மலை - பரமத்தி சாலையில் சுதர்சனம், லோகேஷ் ஆகிய இருவரும் ஓட்டி பழகியதாக தெரிகிறது.

ஆம்னி வேனை சுதர்சனம் ஓட்டி நிலையில் பரமத்தியில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த டொயோட்டோ பார்ச்சூனூர் காரை இருக்கூரை சேர்ந்த விக்‌னேஷ் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது அதிவேகமாக சாலையின் குறுக்கே வந்த ஆம்னி வேன் மீது பார்ச்சூனூர் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது, இதில் ஆம்னி வேன் சுக்குநூறாக நொறுங்கி அதிலிருந்த சுதர்சனம், லோகேஷ் ஆகிய சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜேடர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த இரு சிறுவர்களின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக பரமத்தி வேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கபிலர்மலையில் இரவு நேரத்தில் வாகனம் ஓட்டி பழகும் போது விபத்து ஏற்பட்டு இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story