கோடநாடு வழக்கு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு வழக்கு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வழக்கறிஞர்கள்

கோடநாடு வழக்கு விசாரணையை வருகிற 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதியன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கு மண்டல ஐ.ஜி., தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தனிப்படை போலீசார் 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கோடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ.டி., கூடுதல் காவல் ஆணையாளர் முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சயானுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு சி.பி.சி.ஐ.டி., போலீஸார் சமீபத்தில் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மாவட்ட நீதிபதி அப்துல் காதர் இல்லாததால் சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

சி.பி.சி.ஐ.டி., தரப்பில் கூடுதல் காவல் ஆய்வாளர் முருகவேல் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ், உள்ளிட்டோர் ஆஜராகினர். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், ஒருவர் கூட ஆஜராகவில்லை. விசாரணையின்போது கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்ற கோடநாடு பங்களாவில் இன்று சி.பி.சி.ஐ.டி., போலீஸார்,

தடயவியல் நிபுணர்கள் மற்றும் பொதுப் பணித்துறை பொறியாளர் அடங்கிய குழு ஆய்வு செய்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்தது பற்றி நீதிபதியிடம் தகவலாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதி ஸ்ரீதரன் இந்த வழக்கை வருகிற 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags

Next Story