பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த அதிமுக பிரமுகர்

பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த அதிமுக பிரமுகர்

உயிரிழந்த சேகர்

கன்னியாகுமரியில் பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த அதிமுக பிரமுகரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது58). மாற்றுத் திறனாளியான இவர், திருமணமாகாததால் தனியாக வசித்து வந்தார். இவர் அந்தப் பகுதி அ.தி.மு.க. கிளை அவைத் தலைவராக இருந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேகர் இரவில் வீட்டுக்கு வந்துள்ளார். அதன்பிறகு அவரை யாரும் பார்க்கவில்லை. அவரது வீட்டுக் கதவும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று வீட்டைத் திறந்து பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் சேகர் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சேகர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால் அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததால் அவரது சாவில் சந்தேகம் ஏதாவது உள்ளதா? என்பதை விசாரிப்பதற்காக சேகர் உடலை உறவினர்களிடம் இதுவரை ஒப்படைக்காமல் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிண அறையில் கடந்த 2 நாட்களாக போலீசார் பாதுகாப்பாக வைத்து உள்ளனர். இதனால் சேகர் சாவில் குழப்பம் நீடிக்கிறது.

Tags

Next Story