ராணிப்பேட்டை நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
![ராணிப்பேட்டை நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு ராணிப்பேட்டை நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு](https://king24x7.com/h-upload/2024/06/29/567019-1000040171.webp)
நகர்மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
ராணிப்பேட்டை நகரமன்ற கூட்டம், தலைவர் சுஜாதா வினோத் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.
ஜோதி சேதுராமன் (அ.தி.மு.க.): ராணிப்பேட்டை நகரத்தில் கஞ்சா, குட்கா அதிகளவில் நடமாடுவதால் இளைஞர்கள் அதை பயன்படுத்தி வார்டுகளில் உள்ள மின்விளக்குகளை உடைக்கின்றனர். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். தலைவர்: காவல் நிலையத்தில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சந்தோசம் (அ.தி.மு.க.): கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 63 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அது குறித்து நகரமன்ற கூட்டத்தில் ஒரு இரங்கல் செய்தி கூட தெரிவிக்கவில்லை எனக்கூறினார். இதற்கு சக கவுன்சிலர் குறுக்கிட்டு பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.